பொங்கல் விடுமுறையில் திடீர் மாற்றம்.. ஜனவரி 16-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது!!

 
Ration-Shop

ஜனவரி 16-ம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது தமிழ்நாடு அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ்நாட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

pongal

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி - சேலையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வாங்காதவர்கள், வரும் 16-ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Pongal

இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது காரணமாக வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளுக்கு இன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதற்கு ஈடாக 16-ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் ஜனவரி 27-ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஜனவரி 16-ம் தேதி விடுமுறை நாளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

From around the web