‘ஆரஞ்சு அலர்ட்’.. வரும் 21-ம் தேதி தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை
தமிழ்நாட்டில் நவம்பர் 21-ம் தேதி கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 18 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நவம்பர் 20 மற்றும் 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் 21-ம் தேதி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை குறிக்கும் விதமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.