வெறி நாய் கடித்து பள்ளி மாணவர் பலி! சங்கரன்கோவில் அருகே சோகம்
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் அய்யாதுரை. மாற்றுத்திறனாளியான இவர், அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் அஜித் (17). சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகன் சுஜித், பெரியகோவிலாங்குளம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று வரும் வழியில் அஜித்தை, வெறி நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதை அஜித் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித் வாந்தி எடுத்துள்ளார்.
அதன் பின் வீட்டில் உள்ளவர்கள் கேட்டபோது, நாய் கடித்த விவரத்தை கூறினார். இதனைக் கேட்டு பதறிப்போன உறவினர்கள் சங்கரன்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.