விபத்தில் உயிரிழந்த நண்பன்... குற்ற உணர்ச்சியில் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை! செஞ்சியில் சோகம்

 
Gingee

செஞ்சி அருகே இளைஞர் விபத்தில் உயிரிழந்த, தகவல் அறிந்த நண்பன் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருபவர் திருமால் (எ) ராஜா. இவரது மகன் சீனிவாசன் (20). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரபு (20) என்பவர் கூரியர் சர்வீஸில் வேலை செய்து வந்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

Accident

இருசக்கர வாகனத்தை பிரபு ஓட்டினார். சீனிவாசன் பின்னால் அமர்ந்து இருந்தார். அங்கராயநல்லூர் அருகே சென்றபோது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சீனிவாசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த பிரபு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு விபத்தில் சீனிவாசன் பலியானதை அறிந்த பிரபு தன்னுடன் வந்த நண்பனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி விரக்தி அடைந்தார். இதில் மனமுடைந்த அவர் கூர்மையான இரும்பு ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு, சிகிச்சை முடிந்து இரவு வீடு திரும்பினார். ஆனால் தனது ஆருயிர் நண்பர் சீனிவாசன் விபத்தில் பலியானதை அறிந்து மன வேதனை அடைந்த பிரபு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

Gingee

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் அயா்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது படுக்கையில் இருந்து எழுந்த பிரபு வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் நண்பர் பலியானதால் உயிர் தப்பிய வாலிபர் 2-வது முறை முயற்சியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் எம்.ஜி.ஆர்.நகர் பகுதிமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

From around the web