அதிர்ச்சி! உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு தலித் சகோதரிகள்!! 6 பேர் கைது!

 
UP

உத்தரபிரதேசத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில், நேற்று மாலை அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சகோதரிகள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டனர். இரண்டு சிறுமிகளும் மைனர் மற்றும் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமிகள் கொலை வழக்கில், மூன்று பேர் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அப்பகுதி கிராம மக்களும் சிறுமிகளின் குடும்பத்தினரும் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து லக்கிம்பூர் கேரி போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன், போலீஸ் படையுடன் போராட்ட இடத்திற்கு விரைந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்தார். அப்போது சாலை மறியலை கைவிடுமாறு கிராம மக்களை வலியுறுத்தினர்.

UP

இந்த நிலையில், சிறுமிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச போலீசார் இன்று தெரிவித்தனர். சிறுமிகளின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மாநில அரசை கடுமையாக சாடினார். "லக்கிம்பூரில் (உ.பி.) சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உ.பி.யில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?" என்று மாநில அரசை கடுமையாக சாடினார்.


யோகி அரசில், குண்டர்கள் தாய்மார்களையும், சகோதரிகளையும் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தை அரசு விரைவில் விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், லக்கிம்பூர் கேரி சிறுமிகள் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

From around the web