சிறுமியின் தலையை துண்டாக்கிய 15 வயது சிறுமி... ராஜஸ்தானில் நடந்த சம்பவம்!

ராஜஸ்தானில் 15 வயது சிறுமி பூஜையின் போது 9 வயது சிறுமியின் தலையை துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் ‘ஷ்ரவண்’ எனப்படும் ஆவணி மாதத்தில் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடும் ‘தஷா மாதா’ பூஜை நேற்று துவங்கியது. ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் என்ற பழங்குடியின கிராமத்தில் உள்ள 15 வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டிலும் நேற்று காலை பூஜை செய்தனர்.
அப்போது திடீரென்று, அந்த சிறுமி வெறித்தனமாகச் சென்று, அறையில் வைத்திருந்த வாளை வெளியே எடுத்து அனைவரையும் தாக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோரையும்கூட தாக்க முற்பட்டதால் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி மற்றொரு அறைக்குள் நுழைந்து, 9 வயது சிறுமி வர்ஷாவின் தலையை துண்டித்தார்.
அதனைத் தொடர்ந்தும் அந்த சிறுமி தனது கைகளில் வாளை ஏந்தியபடி, அனைவரையும் கொன்றுவிடுவேன் என்று சொல்லி வீட்டு முற்றத்தில் ஓட ஆரம்பித்தார். சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் அவரது மூத்த சகோதரர் சுரேஷ் ஆகியோர் பிடிக்க முயன்றபோது, அவர்கள் இருவரையும் வாளால் தாக்கி உள்ளார். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியிடம் இருந்து வாளை பறித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து சக்வாரா காவல்துறை அதிகாரி நர்பத் சிங் கூறுகையில், “10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அவளுடைய நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவள் விசித்திரமாக நடந்து கொண்டாள். அவளுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று தோன்றுகிறது. மேலும், பூஜையின் காரணமாக அவள் இரு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.