எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் ஜப்தி? கோலிவுட்டில் பரபரப்பு
Tue, 2 Aug 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது தந்தையும் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இவரது இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் 'சட்டப்படி குற்றம்'. இப்படத்தில் விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் விளம்பர செலவுக்காக 76 ஆயிரத்து 112 ரூபாயை வழங்கவில்லை என தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அந்த விளம்பர உரியாமையாளர் சரவணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை சந்திரசேகர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போலீசாரின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‛‛இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆனால் எப்படி ஜப்தி செய்ய வந்தனர் என தெரியவில்லை'' என்றார்.