நாடு முழுவதும் குடிகாரர்கள் எண்ணிக்கை இவ்ளோதானா!
டெல்லி: இன்று மது அருந்தாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை. நகரங்களில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். கிராமங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கும் மேல் குடிப்பவர்களாகவே உள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் குடிப்பவர்கள், போதைப் பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஆர்.கே.சின்கா இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் பதிலளித்து பேசினார்.
அவர் கூறுகையில், “நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் தேசிய போதை அடிமை சிகிச்சை மையம், எய்ம்ஸ் மற்றும் 10 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் 15 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன.
இந்த அமைப்புகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டவர்கள் 10 வயது முதல் 75 வயது வரையிலானவர்களை சந்தித்து ஆய்வு நடத்தினர். இதில் 186 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை சந்தித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 4,73,569 தனிநபர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த ஆய்வின்படி நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் மது அருந்தி வருவது தெரியவந்துள்ளது. மேலும் சுமார் 3.1 கோடி பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர். 77 லட்சம் பேர் பிற போதைப்பொருட்களை உபயோகித்து வருகின்றனர்.
மது அருந்துவோரில் 5.7 கோடிக்கும் அதிகமானோர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் கஞ்சா பயன்படுத்தும் 72 லட்சம் பேர், பிற போதைப்பொருளை உபயோகிக்கும் 77 லட்சம் பேரும் அந்தந்த பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
இதைப்போல 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள் சுமார் 1.18 கோடி பேர் போதை மாத்திரைகள் பயன்படுத்தி வருவதும், 77 லட்சம் பேர் போதை மருந்துகளை பயன்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் மது உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது,” என்றார்.
மேலும் 10 பெரிய நகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயான போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறிய தாவர்சந்த் கெலாட், இந்த அறிக்கை வருகிற நவம்பர் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
– வணக்கம் இந்தியா